- அடுத்த போகம் முதல் விஞ்ஞானபூர்வமான முறைமைக்கு ஏற்ப அறுவடைகள் கொள்வனவு…
- நாடளாவிய ரீதியில் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு…
வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் அமைச்சரவை உப குழு முதன்முறையாக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பற்றாக்குறையின்றியும் நிவாரண விலையிலும் மக்களுக்கு உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் அடுத்த போகம் முதல் அறுவடைகளை கொள்வனவு செய்யும்போது விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதன் மூலம் நெல் கொள்வனவின்போது ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
நாடளாவிய ரீதியிலுள்ள களஞ்சிய வசதிகளை விரிவபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் அதன் நன்மைகள் நுகர்வோருக்கு கிடைக்கும் விதம் குறித்தும் ஆராயப்பட்டது.
கட்டுப்பாட்டு விலையை கருத்திற்கொள்ளாது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது படிப்படியாக குறைந்து வருவதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை சுட்டிக் காட்டியது. அது தொடர்பான சுற்றி வளைப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகர்களுக்கு அறிவூட்டுவதற்கு உடனடி நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளின் நன்மைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ரமேஸ் பத்திரண, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த யாப்பா அபேவர்தன, விதுர விக்ரமநாயக்க, சனத் நிஷாந்த, தாரக்க பாலசூரிய ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
