பாரம்பரிய மற்றும் சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் இம்முறை பெரஹராக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தியவதன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக நிலமேக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கண்டி தலதா மாளிகை மற்றும் கதிர்காமம் தெவிநுவர, சபரகமுவ உள்ளிட்ட தேவாலயங்களை முதன்மையாக கொண்டு இடம்பெறும் பெரஹரக்கள் கொவிட் ஒழிப்புக்கு உதவும் வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பெரஹரக்களை இம்முறை ஏற்பாடு செய்ய வேண்டிய முறை பற்றி கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பங்குபற்றுதலுடன் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
இம்முறை எந்தவொரு புண்ணியஸ்தலத்திலும் பெரஹரவில் பங்குபற்றுவதற்கும் பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. யாழ்ப்பாணம் நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து பாத யாத்திரையாக கதிர்காமத்திற்கு பெரஹரவுக்கு வருகை தருவோருக்கும் இம்முறை அனுமதியில்லை.
அனைத்து பெரஹரக்களையும் குறைந்தளவான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கொவிட் ஒழிப்பு செயலணி சுட்டிக்காட்டியுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் இருந்து பெரஹரவில் பங்குபற்றும் கலைஞர்கள் குறித்த பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நீர் வெட்டு நிகழ்வும் குறைந்த எண்ணிக்கையானோரின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தலதா பெரஹரவின் கும்பல் மற்றும் ரன்தோலி பெரஹரக்கள் வீதி உலா 10 நாட்களும் நேரடியாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர ஆகியோரும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் தலதா மாளிகையின் தியவதன நிலமே மற்றும் தேவாலயங்களின் தலைமை பஸ்நாயக நிலமேக்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.